காஞ்சியில் ஒரு கல்திட்டை
A cobblestone in Kanchi
கோயில் நகரமான காஞ்சிபுரம், முக்தி தரும் ஏழு நகரங்களில் ஒன்றான காஞ்சிபுரத்தில் பல கோயில்கள் உள்ளன. ஆயிரம் கோயில்களின் நகரமான காஞ்சியில் ஒரு கல்திட்டை!
சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் தொண்டைமான் இளந்திரையன், காஞ்சி நகரத்தை ஆண்டதைப் பரிபாடல் மூலம் அறிய முடிகிறது.
ஆகவே தொண்டை மண்டலம் ஆயிற்று. ‘‘நகரேஷு காஞ்சி’’- ‘‘நகரங்களுள் காஞ்சி’’ எனக் குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்குப் பண்டைக்காலத்தில் புகழ் பெற்று விளங்கிய நகரம் காஞ்சி.
அப்படிப்பட்ட ஊரில் பெருங்கற்காலத்தில் இருந்தே மக்கள் வாழ்ந்துள்ளனர். அதற்கு சான்றாகத்தான் பெருங்கற்கால மக்கள் இங்கு பயன்படுத்திய கல்திட்டை உள்ளது.
கல்திட்டைகள் என்பது பெருங்கற்காலப் பண்பாட்டைச் சேர்ந்த இறந்தவர்களுக்கான நினைவுச் சின்னங்களில் ஒரு வகையாகும்.
அது மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட செங்குத்தான கற்களையும், அவற்றினால் கிடைநிலையில் தாங்கப்படும் பெரிய தட்டையான கற்பலவை ஒன்றையும் கொண்டிருக்கும்.
கல்திட்டை யாவும் பொந்து போன்ற அமைப்பை உருவாக்குவதற்காக சிறிய கற்களினால் மூடி அடைக்கப்பட்டிருப்பதும் உண்டு.
ஆனால், பெரும்பாலான இடங்களில் பெரிய கற்களாலான அமைப்புக்கள் மட்டும் இருக்க, அடைப்புக்கள் காலப்போக்கில் அழிந்துவிட்டன.
கல்திட்டைகள் உலகின் பல பகுதிகளிலும் காணப்படுகின்றன. ‘பெருங்கற்காலப் பண்பாடு’ உலகின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு காலகட்டங்களில் காணப்பட்டதினால் இப்பண்பாட்டுச் சின்னமான கல்திட்டைகளின் காலமும் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன.
தொண்டை மண்டலம் என்று பல்லவர்களின் தலைநகரமாக விளங்கும் காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள மானாம்பதியில் இரண்டு கல்திட்டைகள் அமைந்துள்ளன.
மானாம்பதி கிராமத்தில் அருள்மிகு வானசுந்தரேஸ்வரர் வீற்றிருக்கிறார். இவ்வூரில் வீற்றிருக்கும் சிவபெருமானுடைய பெயரிலேயே இவ்வூர் பெயர் அமைந்திருப்பது சிறப்பாகும்.
மானாம்பதி கிராமத்திற்கும், காஞ்சிபுரத்திற்கும் பெயரில்கூட ஒற்றுமை இருக்கிறது. சுந்தரர் பெருமான் ஈசன் தந்த சாபத்தால் இருகண்களும் இழந்து குருடானார்.
அப்போது சுந்தரர்பெருமான் இந்த கொடுந்துயரத்தை நீக்கும் பொருட்டு இறைவனை நினைத்து திருப்பதிகங்கள் பாடினார்.
பிறகு, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதரை வணங்கு, உன்னை தரிசிக்க என் கண்ணைத் தந்தருள் என்று வேண்டி மனம் உருகி பிராத்தனை செய்தார்.
அப்போது இறைவன் இடக்கண் மட்டும் பார்வை கொடுத்தருளினார். அப்போது பாடிய பதிகமே ‘‘ஆலந்தான் உகந்து அமுது செய்தானை’’ என்ற பதிகம் திருக்கச்சி ஏகம்பம் ஆகும்.
அதன் பொருட்டு கச்சி என்றும், திருக்கச்சியம்பதி என்றும் அழைக்கப்பட்டது. காஞ்சிபுரம் அருகில் கல்திட்டை கண்டுபிடித்த கிராமத்தின் பெயரும் மானாம்பதி என்று தற்போது அழைக்கப்பட்டுவருகிறது.
இவ்வூர் கோயில் அருள்மிகு பெரியநாயகி சமேத உடனுறை வானசுந்தரேஸ்வரர் அருள்பாலிப்பதனால், அக்காலத்தில் வானவன் மாதேவிபுரம் என்று அழைக்கப்பட்டும் வந்தது.
இன்று பேச்சுவழக்கில் மாறி மானாம்பதி ஆயிற்று. இதேபோல் இன்று காஞ்சிபுரம் என அழைக்கும் ஊரினை அக்காலத்தில் திருக்கச்சியம்பதி என்று அழைத்து வந்தனர்.
அன்றைய காலத்தில் திருக்கச்சியம்பதி, இன்று காஞ்சிபுரம். அதேபோல் அன்றைய காலத்தில் வானவன் மாதேவிபுரம், இன்று மானாம்பதி. ஆகவே திருக்கச்சியம்பதி – மானாம்பதி.
இப்படிப்பட்ட இக்கிராமத்தில் பெருங்கற்காலம் எனப்பெறும் பழங்கால மக்கள், இறந்தவர்களை புதைத்து அதன் மேல் அடையாளக் குறிகளாகப் பலவகைக் கற்களை நடுவது, ஒற்றை நெடுங்கற்களை நடுவது போன்ற நிலைகளில் அமைத்துள்ளனர்.
இங்கு இரண்டு கல்திட்டைகளை கண்டுபிடித்தோம். இவற்றில் ஒன்றில் பாறை ஓவியங்களும் இடம்பெற்றிருக்கிறது என்பது கூடுதல் சிறப்பு.
இப்பகுதியில் நாங்கள் முதலாவதாக கண்டுபிடித்த கல்திட்டை மேற்குத்திசை நோக்கி மூன்று பக்கங்களிலும் ஏழு கற்கள் செங்குத்தாக நிறுத்தப்பட்டு அதன்மேல் தட்டையான வடிவில் மிகப் பெரிய பாறை ஒன்று வைக்கப்படுகிறது.
இரண்டாவது கல்திட்டை வடக்குதிசை நோக்கி மூன்று பக்கங்களிலும் ஐந்து பெருங்கற்களை செங்குத்தாக நிறுத்தப்பட்டு அதன்மேல் மிகப் பெரிய தட்டையான பாறை வைக்கப்பட்டுள்ளது.
இக்கல்திட்டையில் செங்குத்தான பாறையின் உட்புறம் வெள்ளை வண்ணத்தில் சில ஓவியங்கள் வரையப் பெற்றுள்ளன.
அதில் ஒன்று விலங்கின் உருவமாக அறியமுடிகிறது. அதன் தொடர்ச்சியில் ஒரு மனித உருவம் போன்ற ஒரு வடிவத்தையும் பார்க்க முடிகிறது.
தொண்டைமண்டலத்தில் 3000 ஆண்டு பழமையான பெருங்கற்கால ஈமச்சின்னம் கிடைத்துள்ளமையால் எவ்வளவு பழமையான ஊர் என்பதும் தெரிகிறது.
இப்பகுதியில் மக்கள் பெருங்கற்காலத்தில் இருந்தே வாழ்ந்துள்ளனர் என்பதையும், அவற்றோடு நிற்காமல் ஓவியங்களையும் அன்றே வரைந்துள்ளதை பார்க்கும்போது, ஓவியக்கலையிலும் வல்லவர்களாகவே அறியமுடிகிறது.
ஏனெனில் ஒரு கலை உணர்வோடு ஓவியங்களைக் கல்திட்டையில் வரைந்திருப்பது பெருங்கற்கால மனிதர்களின் கலை உணர்வை வெளிப்படுத்துவதனால், அன்றைய காலத்தில் இருந்தே காஞ்சி மக்கள் கலை உணர்வுமிக்க காஞ்சி மக்களாகவே இருந்திருக்கிறார்கள்.