செந்தில் பாலாஜி டிஸ்மிஸ் – நிறுத்தி வைத்த ஆளுநர்
செந்தில் பாலாஜி டிஸ்மிஸ்… நள்ளிரவில் உத்தரவை நிறுத்தி வைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி… நடந்தது என்ன?
மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் கருத்து கேட்க முடிவு செய்து இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
செந்தில் பாலாஜி டிஸ்மிஸ் – நிறுத்தி வைத்த ஆளுநர்: தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து செந்தில்பாலாஜியை நீக்கி வெளியிட்ட உத்தரவை 5 மணி நேரத்தில் ஆளுநர் ரவி நிறுத்தி வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித்தருவதாக நடந்த மோசடி தொடர்பாக பதிவான வழக்கில் பல்வேறு கட்ட சோதனைகளை அமலாக்கத்துறை நடத்தினர்.
இதன் ஒரு கட்டமாக அண்மையில் செந்தில் பாலாஜியிடம் 18 மணி நேரத்துக்கும் மேல் விசாரித்த அமலாக்கத்துறை அவரை கைது செய்தது.
அவருக்கு இதயத்தில் ஏற்பட்ட பாதிப்பு தனியார் மருத்துவமனையில் சரிசெய்யப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தொடர அரசு விரும்பியது,
இதற்கு ஆளுநர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.
இந்த நிலையில் நேற்று மாலை 7 மணியளவில் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவிப்பை ஒன்றை வெளியிட்டார்.
இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சியினர் தரப்பில் இருந்து கடும் கண்டனம் எழுந்தது.
இதனையடுத்து செந்தில் பாலாஜியை நீக்கிய உத்தரவை நள்ளிரவில் ஆளுநர் ரவி நிறுத்தி வைத்தார்.
உள்துறை அமைச்சகத்தின் அறிவுரையால் ஆளுநர் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
மேலும் இதுதொடர்பாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் கருத்து கேட்க முடிவு செய்து இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
தனது உத்தரவை நிறுத்தி வைத்தது குறித்து முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆளுநர் கடிதம் எழுதியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
=====================================================
ஆதார் – பான் இணைப்பு இன்றே கடைசி நாள்…!
ஆயிரம் ரூபாய் அபராத தொகை செலுத்திய பிறகே இணைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் எண்ணுடன் பான் கார்டு எண்ணை இணைப்பதற்கான அவகாசம் இன்றுடன் முடிவடைவதால், இணைக்காதவர்கள் ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் இணைக்க நேரிடும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வரி ஏய்ப்பு, போலி ஆதார் மற்றும் பான் கார்டுகள் மற்றும் மோசடி ஆகியவற்றை தடுக்கும் வகையில், மத்திய அரசு ஆதாருடன் பான் கார்டு எண்ணை இணைக்க நடவடிக்கை மேற்கொண்டது.
2023 மார்ச் 31ஆம் தேதிக்குள்ளாக அனைவரும் ஆதாருடன் பான் கார்டு எண்ணை இணைக்க உத்தரவிடப்பட்ட நிலையில், ஜூன் 30ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
இன்றுடன் அவகாசம் நிறைவடைவதால், ஆதாருடன் பான் கார்டு எண்ணை இணைக்காதவர்கள், ஆயிரம் ரூபாய் அபராத தொகை செலுத்திய பிறகே இணைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.