முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
ஆளுநர் ரவிக்கு ஒன்றிய அரசு கடிவாளம் போடாவிட்டால், தமிழ்நாடு மக்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
ஆளுநர் ரவிக்கு ஒன்றிய அரசு கடிவாளம் போடாவிட்டால், தமிழ்நாடு மக்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்று ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்,ரவி தொடர்ந்து அரசியல் அமைப்பு சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்டு வரும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஆங்கில நாளிதழுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார்.
அதில் அவர் பேசியதாவது,”தேசிய அளவிலான கூட்டணி அமைப்பதற்கான நடவடிக்கையை தாம் முன்னெடுத்து உள்ளதால் தமிழக அமைச்சர்களை குறிவைத்து விசாரணை அமைப்புகள் செயல்பட்டு வருகிறது.
செந்தில் பாலாஜியை தன்னிச்சையாக பதவி நீக்கம் செய்தது, ஆளுநர் பாஜகவைபோல் செயல்படுவதை காட்டுகிறது. செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதில் என்ன தவறு ?.
சில ஒன்றிய அமைச்சர்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.
அமலாக்கத்துறையை தனது கிளை அலுவலகம்போல பாஜக மாற்றியுள்ளது. செந்தில் பாலாஜியை மனிதாபிமானமற்ற முறையில் அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
9 ஆண்டுக்கு முன் அளித்த புகார் மீது செந்தில் பாலாஜியை 18 மணி நேரம் சித்ரவதை செய்து கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன?.
ஆளுநர் ரவியை திரும்பப் பெற வேண்டும் என்பது மட்டும் பிரச்சனை அல்ல, ஆளுநர் என்பதே கூடாது என்பது தான் திமுகவின் நிலை.
பாஜகவுக்கு எதிரான திமுகவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. மாநில அரசு நிர்வாகம் சுமூகமாக செயல்படுவதை அனுமதிக்கக் கூடாது என ஆளுநர் செயல்படுகிறார்.
பொறுப்பற்ற முறையிலும் ஆளுநர் செயல்படுகிறார்.வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் தமிழ்நாடு மீது தவறான தோற்றத்தை உருவாக்க ஆளுநர் முயற்சிக்கிறார்.
தமிழ்நாட்டுக்கு முதலீடு வரக்கூடாது, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கக் கூடாது என ஆளுநர் கருதுகிறார்.
மக்கள் நலத் திட்டங்களை அரசு சிறப்பாக செயல்படுத்தி வருவதால் தேசிய அளவில் 2ம் இடத்திற்கு தமிழ்நாடு முன்னேற்றம் அடைந்துள்ளது.
திமுக அரசின் மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகளை ஆளுநர் ரவியால் ஜீரணித்துக் கொள்ள இயலவில்லை.
அடிப்படை அற்ற, அரசியல் சாசனத்திற்கு எதிரான ஆளுநரின் பேச்சுகள் சமூக நல்லிணக்கத்தை சீரழிப்பதாக உள்ளன.
அரசியல் சாசனம் மூலம் நியமிக்கப்பட்ட தனக்கு எந்த அதிகாரமும் இல்லை என தெரிந்தும் பொறுப்பற்ற முறையில் செயல்படுகிறார்.
ஆளுநர் ரவியின் செயல்பாடுகளை கட்டுப்படுத்த தவறினால் தமிழ்நாட்டு மக்களின் கோபத்திற்கு ஒன்றிய அரசு ஆளாக நேரிடும்,”எனத் தெரிவித்துள்ளார்.
==============================================