கருணாநிதி குடும்பமே தமிழ்நாடு தான்
கருணாநிதி குடும்பமே தமிழ்நாடு தான்…” – பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்
பிரதமர் மோடி மத்திய பிரதேசத்தில் பேசியதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
கருணாநிதி குடும்பமே தமிழ்நாடு தான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில், திமுக உயர்நிலை செயல் திட்ட குழு உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கும்மிடிப்பூண்டி வேணு இல்ல திருமண விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “இன்றைக்கு சமூக ஊடகங்கள் வளர்ந்திருப்பதை நாம் பார்க்கிறோம்.
இப்போது நல்லது செய்வதை கூட பயந்து செய்ய வேண்டி இருக்கிறது. எதிர்க்கட்சியாக இருந்தபோது அனைத்தையும் தைரியமாக செய்தோம்.
ஆளுங்கட்சியாக இருக்கும்போது நல்லதை கூட ஜாக்கிரதையாக பொறுமையாக பலமுறை யோசித்து சிந்தித்து செய்ய வேண்டிய நிலை உள்ளது.
வரலாறு நிறைய பேருக்கு புரியவில்லை, நாட்டின் பிரதமராக இருப்பவருக்கே வரலாறு தெரியவில்லை” என பேசினார்.
மேலும், “திமுகவிற்கு வாக்களித்தால் கருணாநிதி குடும்பம் தான் வளர்ச்சி அடையும் என்று பிரதமர் சொல்கிறார்.
ஆம் உண்மை தான் கருணாநிதி குடும்பம் என்பதே தமிழ்நாடு தான். திமுக மாநாடு நடத்தும் போதெல்லாம் குடும்பம் குடும்பமாக மாநாட்டிற்கு வாருங்கள் என்று சொல்லி தான் அழைப்போம்.
கை குழந்தைகளை எல்லாம் தூக்கிக் கொண்டு வந்து அந்த பந்தலிலே தொட்டில் கட்டி தொட்டில் ஆட்டக்கூடிய காட்சி எல்லாம் தலைவர் கலைஞர் நடத்திய மாநாடுகளிலே பார்த்துள்ளோம்.
மாநாட்டிற்கு மட்டுமல்ல போராட்டத்திற்கும் கூட குடும்பம் குடும்பமாக மக்கள் வந்து கலந்து கொள்வது தான் திமுகவின் போராட்டம்” என பதில் கொடுத்தார்.
இதுவரை பிரதமர் மணிப்பூர் பக்கம் செல்லாதது ஏன், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட 50 நாட்களுக்குப் பிறகு நடத்துவது ஏன், என அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர், “நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர் குலைக்க வேண்டும் மதக்கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கருதுகிறார்கள்.
ஒரு நாட்டில் இரண்டு சட்டங்கள் இருக்கக் கூடாது என்கிறார் பிரதமர் மோடி. மதப்பிரச்சனையை அதிகமாக்கி நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி வெற்றி பெற்று விடலாம் என்று பிரதமர் கருதுகிறார்.
நான் உறுதியோடு சொல்கிறேன். நிச்சயமாக வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு சரியான பாடத்தை மக்கள் வழங்குவதற்கு தயாராக இருக்கிறார்கள்.
மத்தியில் சிறப்பான மதச்சார்பற்ற மாநில உரிமைகளை பெறக்கூடிய ஆட்சி அமைய தயாராக வேண்டும்” என தெரிவித்தார்.
பிறந்தநாள்/திருமண நாள் வாழ்த்துக்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.