வீட்டில் குப்பை தொட்டியை இங்கு வைக்காதீர்கள்..அதிர்ஷ்டத்தின் வருகை தடைபடுமாம்..வாஸ்து டிப்ஸ்
வீட்டிற்குள் நுழைந்தால் அமைதியும் ஆனந்தமும் இருக்க வேண்டும். மகிழ்ச்சியும் மன நிம்மதியும் வீட்டிற்குள் இருக்க வேண்டும்.
செல்வ வளமும், செல்வாக்கும் லட்சுமியின் அருளும் வீட்டிற்குள் குடியேற வேண்டும் என்றால் வாஸ்து சாஸ்திரப்படி சில பொருட்களை அந்தந்த இடங்களில் வைக்க வேண்டும்.
வீட்டில் உள்ள குப்பைகளை போட்டு வைக்கும் டஸ்ட்பின் டப்பாவை எந்த இடத்தில் வைக்கலாம் எந்த இடத்தில் வைக்கக்கூடாது என்று பார்க்கலாம்.
ஈசான்யம் எனப்படும் வடகிழக்கு பகுதி தூய்மையாக இருக்க வேண்டும். வீட்டில் இந்த திசை வழியாக தெய்வம் வீட்டிற்கு வரும் என்பது நம்பிக்கை.
எனவே ஒருபோதும் குப்பை போட்டு வைக்கும் டப்பாவை நாம் வடகிழக்கு பகுதியில் வைக்கக் கூடாது.
வடகிழக்கு பகுதியில் குப்பை போட்டு வைக்கும் டப்பாவை வைத்தால் உடல் ஆரோக்கியத்திலும் மன ஆரோக்கியத்திலும் பாதிப்பு உண்டாகும். ஒரு வித மன பதற்றமும் ஏற்படும்.
கிழக்கு திசையில் குப்பை தொட்டியை வைத்தால் பொருளாதார வளர்ச்சியில் தடை ஏற்படும். குடும்பத்தில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் வந்து கொண்டிருக்கும்.
வீட்டின் வடக்கு பகுதியில் குப்பைத் தொட்டியை வைத்தால் தொழில் வளர்ச்சி தடைபடும். நேர்மறை சக்திகள் குறைந்து எதிர்மறை சக்திகள் அதிகரிக்கும்.
தென் கிழக்கு திசை எனப்படும் அக்னி மூலை பகுதியில் குப்பைத் தொட்டியை வைத்தால் வீட்டின் பொருளாதார வளர்ச்சியில் தடை உண்டாகும்.
நம்முடைய வீட்டின் தலை வாசலுக்கு அருகிலேயோ, முன்பாகவே, வாசல் கதவுக்கு பின்னாலோ குப்பை போடும் டப்பாவை வைக்கக்கூடாது அது அதிர்ஷ்ட தேவதையை வீட்டிற்குள் வர விடாமல் தடுத்து விடும்.
வீட்டிற்கு வரக்கூடிய மகாலட்சுமியை தடுத்து விடும். வீட்டின் ஐஸ்வர்யம் குறையும். அப்படி என்றால் குப்பை போட்டு வைக்கும் டப்பாவை எங்குதான் வைப்பது என்று கேட்கலாம்.
வீட்டின் வடமேற்கு பகுதியிலும் மேற்கு பகுதியிலும் குப்பை தொட்டியில் வைக்கலாம். தெற்கு பகுதியிலும் குப்பை தொட்டி வைக்கலாம்.
வீட்டின் பூஜை அறைக்கு அருகிலும், மாடி படிக்கட்டுக்கு அடியிலும் குப்பைத் தொட்டியை வைக்கக் கூடாது.
படுக்கை அறைக்கு அருகிலும் குப்பை போடும் டப்பாவை வைக்கக்கூடாது. அது நமது ஆரோக்கியத்தையும் ஐஸ்வர்யத்தையும் பாதிக்கும்.
வீட்டில் சேரும் குப்பைகளை தினசரியும் அப்புறப்படுத்த வேண்டும். மொத்தமாக போட்டு வைத்தால் துர்நாற்றம் வீசும். குப்பை சேகரிக்கும் தட்டுக்களை சுத்தமாக கழுவி வைக்க வேண்டும்.
ஒருபோதும் உடைந்த குப்பை முறம், குப்பை டப்பாக்களை உபயோகிக்கக் கூடாது.