ஆயிரத்தில் ஒருவர்

Date:

Share post:

ஆயிரத்தில் ஒருவர்

ஆயிரத்தில் ஒருவர் – சீறப்புலியார், ஒரு சீரிய சிவத் தொண்டர். ஆக்கூர் என்ற திருத்தலத்தில் அவதரித்த அவர், அங்கே கோயில் கொண்டிருக்கும் வாள் நெடுங்கண்ணி சமேத தான்தோன்றீஸ்வரரை தினமும் தரிசனம் செய்வதை தன் வாழ்நாள் கடமையாகக் கொண்டவர்.

இதைவிட தினமும் சிவனடியார்களுக்கு அமுது அளிப்பதைத் தன்னுடைய லட்சியமாகவும் நிறைவேற்றியவர்.

லட்சியம் ஓரளவு நிறைவேறினால் அடுத்து பெரிய அளவில் அதை விஸ்தரிக்க வேண்டும் என்ற ஆவலும் பெருகுமல்லவா? சீறப்புலியாரும் அப்படியே உணர்ந்தார்.

அதை ஒருவகையில் பேராசை என்றும் சொல்லலாம். ஆமாம், ஒரே நாளில் ஆயிரம் அடியார்களுக்கு அன்னதானம் வழங்கவேண்டும் என்று தீரா வேட்கை கொண்டார் அவர். ஈசன் அருளால் அது ஈடேறும் என்றும் நம்பினார்.

வெகுநாள் யோசனை மற்றும் திட்டங்களுக்குப் பிறகு கார்த்திகை மாதத்தில் அதற்கான நாளையும் நிச்சயித்து விட்டார்.

அந்த மாதத்தில், பூராட நட்சத்திரத்தன்று ஆயிரம் பேருக்கு அமுது படைப்பது என்று மன உறுதிகொண்டு, அருகிலுள்ள ஊர்களுக்கெல்லாம் தகவல் சொல்லியனுப்பினார்.

தான் சந்திப்பவர்களிடம், தெரிந்தவர்களையெல்லாம் அன்னதானம் பெற அனுப்பி வைக்குமாறும், அவர்களையும் தவறாமல் வந்து கலந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைவாழை இலைகளை சேகரித்தார். அறுசுவை விருந்துக்கான காய்கனி வகைகள், நல்ல அரிசி மற்றும் தானியங்கள் அத்தனையும் சேகரித்து தன் நோக்கத்தை நிறைவேற்றத் தயாராகிவிட்டார்.

அந்த நாளும் வந்தது. ஆக்கூர் தலம் முழுதும் வண்ண அலங்காரங்கள். எங்கெங்கு நோக்கினும் அங்கெல்லாம் சிவனடியார்கள் நிறைந்திருந்தார்கள்.

‘ஓம் நமசிவாய’ மந்திரஒலி, சுற்றுவட்டாரத்தையும், விண்ணையும் நிறைத்தது.

மிகப்பெரிய மைதானத்தில் பந்தலிட்டு, தரையில் விரிப்பு விரித்து, ஆயிரம் வாழை இலைகள் போடப்பட்டதில் தரையே பசுமைப் பொலிவு பெற்றது.

காய்கறிகள், சாதம் எல்லாம் பரிமாறப்பட்டன. யாருக்கும் எந்த சுவைகுறைவோ, உணவு பற்றாக்குறையோ ஏற்பட்டுவிடாதபடி கவனித்துக் கொண்டார் சீறப்புலி நாயனார்.

ஒரே ஒரு கவலைதான் – ஆயிரம் சிவனடியார்கள் வரவேண்டுமே!

ஒருவர்கூடக் குறையக் கூடாதே! உணவுச் சாலை வாசலிலேயே காத்திருந்தார்

நாயனார் – ஒவ்வொரு சிவனடியாரையும் வரவேற்கும் பண்பு ஒரு காரணம், எண்ணிக்கை கணக்கு வைத்துக்கொள்வது இன்னொரு காரணம்.

சிவனடியார்கள் ஒவ்வொருவராக வந்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக எண்ணிக்கை பல நூறுகளைக் கடந்தது.

ஐநூறு, அறு நூறு, ஏழு நூறு… நிச்சயமாக ஆயிரத் தைக் கண்டுவிடலாம்! சந்தோஷத்தில் திளைத்தார் சீறப்புலியார்.

இன்னும் இருநூறு பேர்தான் பாக்கி… எண்ணூறு, தொள்ளாயிரம்… இன்னும் நூறே பேர்தான் வேண்டும்… எப்படியும் ஆயிரம் பேர் வந்துவிடுவார்கள்.

தன்னுடைய இந்த சாதனையில் சற்றே இறுமாப்புகொண்டாரோ? தான் செய்வதும், அடியார்கள் வருகையும் தான்தோன்றீசனின் அருள்தான் என்பதை சற்றேமறந்துவிட்டாரோ?

அப்படித்தான் இருக்கும். வரவேண்டியவர்கள் நான்கு, மூன்று, இரண்டு என்றாகி, இன்னும் ஒரே ஒருவர்தான் வர வேண்டும் என்று குறைபடுகிறதே… காணோமே!

அந்த ஆயிரமாவது அடியாரைக் காணோமே. கண்ணுக் கெட்டிய தூரம் வரை பார்த்தாகிவிட்டது. காணவே காணோம்…

அடடா, இத்தனை முயற்சித்தும் பலன் முழுமையடையவில்லையே! ‘முயற்சியா? யாருடைய முயற்சி?

நீ செய்யும் முயற்சிகளுக்கெல்லாம் நீயேதான் காரணமா?’ மனசின் மூலைக்குள் உறுத்தலாக ஒரு கேள்வி.

அடியார்கள் உணவருந்த ஆரம்பித்துவிட்டார்கள். உண்டு முடித்து, ஒவ்வொருவராக எழுந்து வெளியேறினார்கள்.

வாசலிலேயே நின்றிருந்த சீறப்புலியார், திரும்பிச் செல்பவர்களை ஏக்கத்துடன் பார்த்தார். ஒருவர், ஒரே ஒருவர் இல்லாமல் போய் விட்டாரே! எல்லோரும் வெளியேறிய பிறகு கனத்த இதயத்துடன், உணவுக் கூடத்தில் நுழைந்தார்.

ஆயிரம் பேருக்கு இலை போட்டு பரிமாறினோமே! ஒரு இலை மீதம் இருக்க வேண்டுமே! சிந்தித்தபடியே உணவுக்கூடம் முழுவதும் சுற்றி வந்தார்.

என்ன ஆச்சரியம், ஆயிரம் இலைகளிலும், அனைவரும் சாப்பிட்ட தடம் இருந்தது. ஒரு இலைகூட மீதம் இல்லை. என்ன அதிசயம் இது!

தன்னை சோதித்திடவே ஆயிரத்தில் ஒருவர் குறைந்துவிட்டதுபோல் தோற்றுவித்து, பிறகு, தானே ஆயிரத்தில் ஒரு சிவனடியாராக உள்ளே வந்து அமர்ந்து அமுதுண்டு சென்றிருக்கிறான் இறைவன் என்ற உண்மை அவருக்குத் தேனாய்ப்புரிந்தது. பக்திப் பரவசமானார்.

ஆட்டுவிப்பவன் அவனாயிருக்க, தான் ஆடியது என்ன சிறுமைத்தனம் என்று எண்ணி வெட்கினார். இக்கோயிலை நிர்மாணித்த கோச்செங்கட்சோழனும் இதேபோன்ற அன்னதான தர்மத்தைச் செய்ததாகவும் ஒரு புராணம் சொல்லப்படுகிறது.

அதாவது இக்கோயிலை அவன் நிர்மாணிக்க முயன்ற போது முதல் நாள் கட்டிய சுவர் மறுநாள் இடிந்து விழுந்து விடுகிறது.

அடுத்தடுத்து இவ்வாறு நிகழ, இதை துர்சகுனமாகவே கருதிய சோழன், இறைவனிடம் கெஞ்சி மன்றாடுகிறான்.

அவனுடைய கனவில் தோன்றும் ஈசன், ஒரு மண்டல காலத்துக்கு தினமும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்தால் குறை நிவர்த்தியாகும் என்று அறிவுறுத்துகிறார்.

அதேபோல மன்னன் தானம் செய்ய, ஒவ்வொரு நாளும் தானம் பெறுபவர்களில் ஒருவர் குறைவார். மன்னன் மனமொடிந்து போகிறான். பெருமானிடம் தண்டனிட்டு அழுதான்.

உடனே, ‘கவலைப்படாதே, 48ம் நாள் உன் எண்ணம் பரிபூரணமாக நிறைவேறும்‘ என்று ஆறுதலளிக்கிறார்.

அதேபோல அந்த நாளில் அதுவரை தான் சந்தித்திராத ஒருவர் ஆயிரமாவது நபராக அமர்ந்து அன்ன தானம் ஏற்றுக் கொண்டதை சோழன் கவனிக்கிறான்.

அவர் உணவருந்தி முடித்தபின் அவரிடம், ‘ஐயா தாங்கள் வெளியூரா? இதற்கு முன் தங்களை நான் சந்தித்ததேயில்லையே!’ என்று கேட்கிறான்.

உடனே தெய்வீகமாகச் சிரித்த அவர், ‘எனக்கு உள்ளூர், வெளியூர் என்று எதுவுமே கிடையாது. எல்லா ஊரும் என் ஊரே! ‘என்று கம்பீரமாகக் கூறிவிட்டு கோவில் கர்ப்பகிரகத்துள் சென்று மறைகிறார்.

அன்று முதல் இக்கோவில் நாயகன் ‘தான் தோன்றீஸ்வரர்’ என்றழைக்கப்படுகிறார்.

மன்னனுக்கு கோயில் கட்டுவதில் விநாயகரும் உதவினார் என்று இன்னொரு கதையும் உண்டு.

கோவில் சுவர் இடிந்து விழுந்து கொண்டேயிருப்பதால் துயருற்ற மன்னன் விநாயகரை வேண்டிக் கொள்ள, கோவில் திருக்குளத்தில் அவன் மூன்று நாழிகை நேரம் மூழ்கி பிரார்த்தனை புரிந்தானானால் அவன் எண்ணம் ஈடேறும் என்று அவர் அறிவுறுத்தினார்.

அதேபோல சோழன் மூழ்கி மேலெழுந்தபோது அவன் கையில் கோயில் கர்ப்பகிரகம் கூடவேவந்தது! அதைக் கண்டு மகிழ்ந்த அவன் அதை வைத்தே கோயில் கட்ட, பிறகு எந்த இடையூறும் இல்லாது போயிற்று.

இவ்வாறு மன்னனை வழிநடத்திய விநாயகர் ‘பொய்யா விநாயகர்‘ என்ற பெயரில் கோயிலின் பின்புறத்தில் தனி சந்நதி கொண்டிருக்கிறார்.

கோயில் தரிசனம் காண்போமா?

கோயிலினுள் நுழைந்ததும் சித்தி விநாயகரை தரிசிக்கலாம். மாடக் கோயிலின் படிகளில் ஏறி உள்ளே சென்று, நந்தி மற்றும் பலிபீடத்தைக் கடந்தால் ஈசனின் கருவறையை அடையலாம்.

இருபுறமும் அழகு மிகு துவார பாலகர் சிற்பங்கள். யானை ஏறமுடியாத மாடக் கோயில்கள் பலவற்றைக் கட்டிய கோச்செங்கட்சோழன், இறைவனைப் பாடும் நிலையில் சிலையாக உள்ளார். சீறப்புலி நாயனாருக்கும் தனி இடம் உள்ளது.

அவருக்கு எதிரே தெற்கு நோக்கிய சந்நதியில், ‘ஆயிரத்துள் ஒருவர்’, நான்கு கரங்களுடன், இடக்கரத்தில் தண்டு ஊன்றிய நிலையில் காட்சியளிக்கிறார்.

இறைவிக்கு இந்தத் தலத்தில் வாள் நெடுங்கண்ணி என்று பெயர். நால்வர், முருகன், நடராஜர் சந்நதிகளும் உள்ளன.நியாயமாக உழைத்தாலும், நீடித்த வறுமையால் வாடுவோருக்கு இக்கோயில் ஈசன் இன்னருள் புரிகிறார்.

பதவி உயர்வு, புது உத்யோகம், வியாபாரத்தில் வளர்ச்சி-லாபம், தொழிலில் முன்னேற்றம் என்று பொருளாதார உயர்வுக்கு இந்தக் கோயில் ஆன்ம பலம் அருள்கிறது.

இதுபோன்ற வேண்டுதல்களுடன் ஈசனைத் தஞ்சமடைவோர், அவை நிறைவேறியதும், தங்களால் இயன்ற எண்ணிக்கையில் அன்னதானம் அளித்து இறைவனுக்கு நன்றிக் கடன் செலுத்துகிறார்கள்.

தான்தோன்றீஸ்வரரையும், ஆயிரத்தில் ஒருவரையும் தரிசித்தால் பஞ்சம், பட்டினி இருக்காது என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை. மயிலாடுதுறை – தரங்கம்பாடி சாலையில், மயிலாடுதுறையிலிருந்து பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஆயிரத்துள் ஒருவன் குடிகொண்ட திருத்தலமான ஆக்கூர்.

இக்கோயில் காலை 6 முதல் 11 மணி மற்றும் மாலை 4 முதல் 7.30 மணிவரை திறந்திருக்கும்.ஆலய முகவரி: அருள்மிகு ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில், அக்கூர் – 609301, நாகப்பட்டினம் மாவட்டம். தொலைபேசி: 9865809768; 9787709742; 7502222850.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...