எதிர்க்கட்சிகள் ஒற்றுமையை சீர்குலைக்கிறார் கெஜ்ரிவால்: காங்கிரஸ் குற்றச்சாட்டு
Kejriwal disrupts opposition unity: Congress accuses
‘கெஜ்ரிவாலின் நடவடிக்கைகள் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கானது அல்ல. மாறாக பாஜவுக்கு ஆதரவான திட்டமிட்ட செயல்’ என காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மக்கான் குற்றம்சாட்டி உள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மக்கான் நேற்று தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
டெல்லி அவசர சட்டத்தை நாடாளுமன்றத்தில் எதிர்க்கும் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் உதவியை கெஜ்ரிவால் நாடுகிறார்.
ஆனாலும் காங்கிரஸ் தலைவர்களை அவர் கேலி செய்து வருகிறார். அவரது அமைச்சர்கள் எங்கள் கூட்டணிக்கு முன்நிபந்தனைகளை வைக்கிறார்கள்.
இவ்வாறு கடுமையாக விமர்சித்து விட்டு ஆதரவு கோருவது எந்த வகையான கூட்டணி? ஊழல் குற்றச்சாட்டில் சிறை தண்டனையை தவிர்ப்பதற்கான முயற்சிகளில் கெஜ்ரிவால் ஈடுபட்டுள்ளார்.
அவரது சகாக்கள் இருவர் ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுவே கெஜ்ரிவாலின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு காரணம்.
எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கான கெஜ்ரிவாலின் நடவடிக்கைகள் ஒற்றுமைக்காக அல்ல, மாறாக அதை நாசமாக்குவதற்கும், பாஜவுக்கு ஆதரவளிப்பதற்குமான திட்டமிடப்பட்ட நடவடிக்கை. இவ்வாறு கடுமையாக விமர்சித்துள்ளார்.
* தலைமை பதவிக்கு ராகுலை நிறுத்த கூடாது
டெல்லி அவசர சட்டத்தை நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எதிர்க்கவில்லை என்றால், காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணியில் ஆம் ஆத்மி இடம் பெறாது என என ஏற்கனவே அக்கட்சி கூறி உள்ளது.
இந்நிலையில், ஆம் ஆத்மி தேசிய செய்தி தொடர்பாளர் பிரியங்கா கக்கர் அளித்த பேட்டியில், ‘‘நாட்டை காப்பாற்ற வேண்டுமென்றால், ராகுல் காந்தியை 3வது முறையாக தலைமை பொறுப்புக்கு நிறுத்த மாட்டோம்,
அதற்காக எதிர்க்கட்சிகளை வற்புறுத்த மாட்டோம் என்று காங்கிரஸ் முதலில் அறிவிக்க வேண்டும்’’ என புதிய நிபந்தனையை முன்வைத்துள்ளார்.