“அழகென்ற சொல்லுக்கு முருகா” நாமக்கல்லில் ஒரு பழனி கோயில்! குழந்தை பேறு கிடைக்கும் என ஐதீகம்!
A Palani temple in the name of “Muruga for beautiful words”! It is believed that the child will be born!
நாமக்கல் கூலிப்பட்டி முருகன் கோவிலில் வழிபட்டால் குழந்தை பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
நாமக்கல் அடுத்துள்ள கூலிப்பட்டியில் இயற்கை எழில் மிகுந்த மலை மீது அழகுற அமைந்துள்ளது இந்த கந்தகிரி பழனி ஆண்டவர் திருக்கோயில். 300 ஆண்டுகள் பழமையான இந்த கோயிலில் பழனி மலையில் உள்ளது போலவே முருகபெருமான் ஆண்டி கோலத்தில் இருப்பதால் ‘பழனி ஆண்டவர்’ என்றே அழைக்கப்படுகிறார்.
இக்கோவிலின் மூலவரான பழனி ஆண்டவரை வழிபட்டால் விரைவில் திருமணமாகும் என்பதும், முருகனுக்கு சஷ்டி பூஜை செய்து மனமுருக பிரார்த்தனை செய்தால் குழந்தை பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
மலையின் மீது ஏறத் தொடங்கி சில படிகளை கடந்தால் தெற்கு பகுதியில் சிவபெருமான் கழுத்தில் பாம்புடன் காட்சி அளிக்கிறார். நுழைவாயிலை கடந்து ஏறத் தொடங்கியதும் ஞானப் பழத்தால் ஏற்பட்ட பிரச்னையில் கோபித்துக் கொண்டு கயிலை மலையை விட்டுச் சென்ற முருகனை சமாதானப்படுத்தும் வகையிலும், முருகன் தந்தைக்கு உபதேசம் செய்யும் நிகழ்வும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மலையின் மேலே இடும்பன் கோயிலும், விநாயகர் சன்னதியும் அமைத்துள்ளது. இங்குள்ள இடும்பனை வணங்கினால் கோபம், சூழ்ச்சி, வஞ்சகம், ஆத்திரம் போற்றக் கெட்ட குணங்கள் அனைத்தும் நம்மை விட்டு நீங்கும் எனக் கூறப்படுகிறது.
கூலிப்பட்டி மலையின் மேலே உள்ள கோபுரத்தின் அருகே சனி மூலையில் நவக்கிரகங்கள் சிறிய மண்டபத்தில் உள்ளன. மாதந்தோறும் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறுகின்றன. கார்த்திகை பூஜை, சஷ்டி பூஜை, பங்குனி உத்திரம், சூரசம்ஹாரம் உள்ளிட்ட திருவிழாக்களும் இக்கோயிலில் விஷேசமாக நடைபெறுகின்றன.