குஜராத்தை தாக்க இருக்கும் பிபோர்ஜோய் தீவிர புயல்: பிரதமர் மோடி உயர்மட்ட ஆலோசனை
கட்ச்- கராச்சி இடையே கரையை கடக்கும் என எதிர்பார்ப்பு அதிதீவிர கனமழை மற்றும் சூறாவளி காற்று வீசும் என வானிலை மையம் அறிவிப்பு
அரபிக்கடலில் உருவான பிபோர்ஜோய் புயல் அதிதீவிர புயலாக வலுவடைந்துள்ளது. இந்தப்புயல் குஜராத் மாநிலம் கட்ச்- பாகிஸ்தானின் கராச்சி இடையே வியாழக்கிழமை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குஜராத் மாநிலம் சவுராஷ்டிரா மற்றும் கட்ச் கடற்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை மற்றும் 150 கி.மீ.-க்கும் அதிகமான வேகத்தில் காற்று வீசும் என்பதால், பிரதமர் மோடி உயர்மட்ட ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
கூட்டத்தில் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றுதல், எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை உள்ளிட்ட முக்கியம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படலாம்.
சவுராஷ்டிரா மற்றும் கட்ச் கடற்கரை பகுதிகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. புதன்கிழமை வரை இரு இடங்களில் உள்ள கடற்கரைகள் கொந்தளிப்புடன் காணப்படும்.
வியாழக்கிழமை கடல் அதிக அளவில் கொந்தளிப்பாக காணப்படும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. கட்ச், ஜாம்நகர், மொர்பி, கிர் சோம்நாத், போர்பந்தர், தேவ்பூமி த்வர்கா மாவட்டங்கள் கனமழை மற்றும் சூறாவளி காற்றால் பாதிக்கபடலாம்.
13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை 15 கி.மீட்டருக்கும் அதிகமாக வேகத்தில் காற்று வீசலாம். கட்ச் மாவட்ட அதிகாரிகள் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றும் வேலையை தொடங்கிவிடட்னர். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.