மார்கழி பூவே… மார்கழி பூவே…
மார்கழி மாதத்தின் மிகவும் சிறப்பு கோலம். வீட்டு வாசலில் கோலமிடுவது என்பது நம் முன்னோர்களின் காலத்தில் இருந்தே கடைப்பிடித்து வரும் பழக்கம். வருடம் முழுக்க வாசலில் கோலமிட்டாலும், மார்கழி மாதம் மட்டும் அனைவர் வீட்டு வாசலிலும் அழகிய வண்ணக் கோலங்களை பார்க்க முடியும்.
விடியற்காலை குளிரைக்கூட பொருட்படுத்தாமல், இந்த மாதம் அனைத்து பெண்களும் போட்டி போட்டுக் கொண்டு வாசலில் கோலமிடுவார்கள்.
ஏனென்றால் இந்த மாதம் முழுவதும் தேவர்கள் அனைவரும் தங்களுக்கெல்லாம் மேலான பரம்பொருளான பெருமாளை வழிபடுகிறார்கள்.
தேவர்களெல்லாம் தம்மை பூஜித்து வழிபடும் மாதம் என்பதால்தான் பகவான் கிருஷ்ணர், மாதங்களில் தாம் மார்கழியாக இருப்பதாக சிறப்பித்துச் சொல்லியிருக்கிறார்.
மேலும் மார்கழி மாதத்தில் கோலம் போடுவதால் பலவிதமான நன்மைகள் உள்ளன. இம்மாதம் கோலமிடுவது மட்டுமில்லாமல், அதில் பரங்கிப்பூவையும் வைப்பது தனிச்சிறப்பு.
பரங்கிப் பூ
மார்கழி மாதத்தில் வெறும் கோலத்தை மட்டும் போடாமல் கோலங்களின் மீது பரங்கிப் பூ வைத்து அழகுபடுத்துவது பாரம்பரியமாக கடைப்பிடித்து வரும் வழக்கம்.
இதற்கு முக்கிய காரணம் தங்கள் வீட்டில் திருமண வயதுடைய பெண் இருக்கிறாள் என்பதை மற்றவர்களுக்கு தெரிவிக்கும் அடையாளமாகத்தான் கோலமிட்டு பரங்கிப்பூவினை வைப்பதாக ஐதீகம்.
மேலும் அந்த காலத்தில் இப்போது இருக்கும் திருமண இணையதளமோ அல்லது தரகர்களோ இல்லை. அதனை பூக்களைக் கொண்டே மற்றவர்களுக்கு தெரியப்படுத்துவார்கள்.
பரங்கிப்பூ மட்டும் வைக்கக் காரணம்
மார்கழி மாதத்தில் மட்டும் பரங்கிப்பூக்களை வைக்கிறார்களே மற்ற 11 மாதங்களில் அந்த பழக்கம் இல்லையே என்று கேட்கலாம்.
மார்கழியில் பரங்கி மலர் வைக்க, தை மாதத்தில் திருமணம் கைகூடிவரும் என்பது நம்பிக்கை. மேலும் மார்கழி மாதத்தில் பூசணி பூவானது அதிகமாகப் பூக்கும் என்பதால் இந்தப் பூவினை நம் முன்னோர்கள் பயன்படுத்தினார்கள்.
கோலத்தினால் ஏற்படும் பயன்கள்
கோலம் போடுவதால் மனதுக்கு உற்சாகம் ஏற்படும். நினைவாற்றல் அதிகரிக்கும். மனஒருமைப்பாடு இருந்தால் தான் புள்ளிகளைச் சரியாக இணைத்துக் கோலம் போடமுடியும்.
கோலங்கள் போடாத வீடுகளில் கூட மார்கழி மாதத்தில் கோலமிட்டு நடுவில் பசுசாண உருண்டையை வைத்து அதில் பரங்கிப் பூவினை வைப்பார்கள். பரங்கிப்பூ கிடைக்காத பட்சத்தில் வீட்டில் பூக்கும் செம்பருத்தி பூவைக்கூட வைக்கலாம்.
திருமணம் கைகூடும்
நம் பாரம்பரியத்தில் அந்தக் காலங்களில், மார்கழி மாதத்தில் எந்த வீட்டில் கோலம் போட்டு, சாண பிள்ளையார் பிடித்து வைத்து, அதன் மேல் பூசணிப் பூவை வைத்து இருக்கிறார்களோ, அந்த வீட்டில் கன்னிப் பெண் இருக்கின்றாள் என்பதை குறிக்கும்.
இதைப் பார்க்கும் மற்றவர்கள் அந்த வீட்டில் கல்யாணம் ஆகாத பெண் இருக்கிறாள் என்பதை அறிந்துகொண்டு, திருமணத்திற்காக பெண் பார்ப்பவர்கள் அந்த வீட்டில் உள்ள பெரியவர்களை அணுகுவார்கள். அந்த காலத்தில், கிராமங்களில் எல்லாம் வீட்டில் உள்ள கன்னிப் பெண்களை வெளியே காண முடியாது. இதற்காக இந்த பழக்கமானது மேற்கொள்ளப்பட்டது.
உடல் நலத்தை பேணிக்காக்கும்
காலை வேளையில் வீட்டு வாசலில் போடப்படும் கோலமானது கன்னிப்பெண்ணின் கையால் போடவேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். காலை வேளையில் வெளிவரும் ஓசோன் வாயுவை சுவாசிக்கும் கன்னிப்பெண்களின் ஆரோக்கியம் அதிகரிக்கும். ஓசோன் வாயு உடல் மீது படும் போதும் அவர்களின் முகமானது பொலிவுடனும் பிரகாசமாகவும் மாறிவிடும் என்பது நம்பிக்கை. கன்னிப்பெண்களின் அழகு தை மாதத்தில் அந்தப் பெண்ணை காணவரும் மாப்பிள்ளை வீட்டினர் அந்தப் பெண்ணின் அழகான தோற்றத்தைக் கண்டு திருமணத்தை நிச்சயித்து விடுவார்கள். இதன் காரணமாக வீட்டில் உள்ள திருமணமாகாதப் பெண்ணிற்கு திருமணம் நடந்துவிடும் என்பதற்காகவும் இந்த வழக்கமானது கடைபிடிக்கப்பட்டது.
இருளர் குழந்தைகளுக்கான ஃபேஷன் ஷோ பற்றி தெரிந்து கொள்ள
சிந்திங்க9 பொருட்களை வாங்குவதற்கு