கர்ப்ப காலம்
கர்ப்ப காலம் என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியான கட்டம். உடல் ரீதியாக எத்தனை பிரச்னைகள் இருந்தாலும் அந்த ஒன்பது மாதங்களில் ஒவ்வொரு தருணங்களும் ரசிக்க வேண்டியவை. இந்தக்காலக்கட்டத்தில் அவர்கள் உடலளவில் பல மாற்றங்களை சந்திப்பார்கள்.
அதில் பெண்கள் பலரும் கவலைப்படும் ஒரே விஷயம், தங்களின் உடல் குழந்தை பிறப்புக்கு முன்பு இருந்தது போல் அதே கட்டுக்கோப்பாகவும் மற்றும் சருமம் சார்ந்த பிரச்னைகள் ஏற்பட்டால் அதிலும் மாற்றம் ஏற்படுமா என்பது.
ஒரு பெண் கர்ப்பம் தரித்த நாள் முதல் பிரச்னைக்குறிய தீர்வினை ஆரம்ப நிலையிலேயே கவனித்தால் எந்த நேரத்திலும் அவர்கள் மீண்டும் பழைய உடல் கட்டமைப்புக்குத் திரும்ப முடியும் என்கிறார் புகழ்பெற்ற சரும நிபுணர் டாக்டர் சைத்ரா ஆனந்த்.
முகப்பரு
கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் உற்பத்தி மற்றும் மாற்றம் காரணமாக பெரும்பாலான பெண்கள்முகப்பரு பிரச்னையினை சந்திப்பார்கள்.
இதனால் மனஉளைச்சலுக்கு தள்ளப்படுகிறார்கள். உடலில் துத்தநாகத்தின்அளவு குறைவதும், முகப்பரு தோன்றுவதற்கான அடிப்படை காரணம்.
இதனால் முகப்பருக்கள் எளிதில் குணமாகாது. அந்த காலக்கட்டத்தில் வைட்டமின் சி சத்துள்ள உணவினை சேர்த்துக்கொள்ளலாம்.
இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும். மேலும் முகப்பரு பரவுவதையும் தடுக்கும். உடலில் உள்ள நச்சுத்தன்மை கூட முகப்பரு தோன்ற காரணமாகும். அதை வெளியேற்ற நிறைய தண்ணீர் குடிப்பது அவசியம்.
நீரிழப்பு
பிரசவமும், பால்சுரப்பும் சருமத்தில் நீரிழப்பை உண்டாக்கும். மேலும் சருமம் மந்தமான மற்றும் உயிரற்ற தோற்றத்தில் காட்சியளிக்கும்.
ஆரோக்கியமான ரத்த அணுக்கள் நல்ல முறையில் செயல்பட, தண்ணீர் மிகவும் அவசியம். தண்ணீர் தாய்ப்பாலின் ஒரு முக்கிய அங்கமாகும். பாலூட்டும் தாய்மார்களுக்கு நல்ல பால்சுரப்புக்கு தண்ணீர் மிகவும் அவசியம்.
கர்ப்ப காலத்தின் போதும் அதற்கு பிறகும் நிறைய திரவங்கள் குடிப்பது, மலச்சிக்கலை எளிதாக்கும், தோலை மென்மையாக்கும், நச்சுத்தன்மையை வெளியேற்றும், சிறுநீர்பாதையில் ஏற்படும் நோய்த்தொற்றுகள் போன்ற அபாயத்தில் இருந்து பாதுகாக்கும். வெறும் தண்ணீர் மட்டுமே எப்படி குடிப்பதுன்னு பலருக்கு தோன்றலாம்.
தண்ணீர் மட்டும் இல்லாமல் மற்ற திரவம் சார்ந்த உணவுகளையும் சேர்த்துக் கொள்ளலாம். அதாவது, பால், பழச்சாறுகள், சூப்வகைகள், ஸ்பார்க்லிங்வாட்டர் (நுரைக்கும்தண்ணீர்), டீ, காபி (காபீன் நீக்கப்பட்டது), பழங்கள் மற்றும் பச்சை காய்கறிகளையும் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம்.
நிறமி
நிறமி என்பது பேறுகால பசலை. கர்ப்ப காலத்தில் சரியான பராமரிப்பு இல்லாமல் இருந்தால் நிறமியின் பாதிப்பு ஏற்படும்.
மெலஸ்மா, முகத்தில் கரும்புள்ளிகள் தோன்றும். இந்த புள்ளிகள் பொதுவாக நெற்றியில், கன்னங்கள் மற்றும் கழுத்தில் தோன்றும். முழங்கைகள், முழங்கால்கள், கைகளின் கீழ்ப்பக்கம் உள்ள தோல்கூட கருப்பாக மாறும் வாய்ப்புள்ளது.
இதனை தடுக்க வெயிலில் செல்லும்போது எஸ்.பி.எஃப்30 உள்ள ஒரு சன்ஸ்கிரீன் லோஷனை பயன்படுத்த வேண்டும். சூரிய ஒளியில் இருந்து உங்கள் முகத்தைப் பாதுகாக்க தொப்பி அணியலாம்.
சூரிய ஒளி உங்கள் முகத்தில் பட்டால் கரும்புள்ளிகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதற்கான சிறப்பு சிகிச்சைகளும் உள்ளன. மருத்துவர் ஆலோசனைபடி செய்து கொள்ளலாம்.
வரித்தழும்புகள்
கர்ப்ப காலத்தில் குழந்தை கருவில் இருப்பதால், வயிறு பெரிசாகும். உடல் வேகமாக வளரும்போது வரித்தழும்புகள் தோன்றும்.
சரும அடிப்பகுதியில் உள்ள மீள்நார்கள் விரிவடைவதாலும் வரித்தழும்புகள் ஏற்பட ஒரு காரணம்.
இவை பெரும்பாலும்அடிவயிறு, மார்பகங்கள், இடுப்பு மற்றும்தொடைப்பகுதி, கால்கள் போன்ற இடங்களில் ஏற்படும்.
ஒரு பெண்ணுக்கு கர்ப்ப காலத்தில் ஒன்பதாவது மாதத்தில், சராசரியாக 9 முதல்12 கிலோ வரை எடைகூடும்.
இதற்கு மேல் எடை கூடினால் வரித்தழும்புகள் அதிகம் தோன்ற வாய்ப்புள்ளது. சில சமயம் வரித்தழும்பு காரணமாக அரிப்பு ஏற்படும். அந்த சமயத்தில் மாய்சரைசிங் கிரீம் பயன்படுத்துவது நல்லது.
முடி உதிர்தல்
பிரசவத்திற்கு பிறகு முடி உதிர்தல்என்பது பொதுவானது. குழந்தைப்பிறப்புக்கு பிறகு 50% பெண்களுக்கு முடி உதிர்வு பாதிப்பு ஏற்படுகிறது.
அதே சமயம் அந்தப் பிரச்னை அதிகமாக இருந்தால், உடனடியாக சரும நிபுணரை அணுகி ஆலோசனை பெறவும்.
கட்டுக்கோப்பான உடல்
கர்ப்ப காலத்தின் போது உங்க எடை கூடுவதால், நீங்கள் முன்பு பயன்படுத்திய உடை உங்களுக்கு பொருந்தாது.
பிரசவத்திற்கு பிறகு உணவு ஆலோசகர் மற்றும் உடற்பயிற்சி நிபுணர்களின் ஆலோசனை பெற்று கட்டக்கோப்பான உடலை நீங்கள் மீண்டும் பெறலாம்.
பிரசவ காலத்தில் சருமம் விரிவடைவதால் பல பெண்களுக்கு வயிற்றுப் பகுதியில் சருமம் தளர்வடையும்.
அதனை தோல் இறுக்கம் சிகிச்சை மூலம் சீர் செய்யலாம். இடுப்பு அங்குலங்களையும் சிகிச்சை மூலம் குறைக்கலாம்.
மேலும்
மெட்ராஸ் ஐ பற்றி தெரிந்து கொள்ள
சிந்திங்க9 பொருட்களை வாங்குவதற்கு