தினம் ஒரு திருக்கோயில்-திருவெண்காடு
இறைவர் திருப்பெயர்: சுவேதாரண்யேஸ்வரர், வெண்காட்டு நாதர்.
இறைவியார் திருப்பெயர்: பிரமவித்யாநாயகி.
தல மரம்: ஆல், கொன்றை, வில்வம்,அரசு
தீர்த்தம் : முக்குளம் (சூரிய, சந்திர, அக்கினி தீர்த்தங்கள்; முதலில் அக்கினி, பிறகு சூரிய இறுதியாக சந்திர தீர்த்தம் என்றமுறையில் நீராடுவர்.)
வழிபட்டோர்: சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், கபிலதேவ நாயனார், பரணதேவ நாயனார், பட்டினத்துப் பிள்ளையார், சேக்கிழார்,பிரம்மன், இந்திரன், வெள்ளையானை, சிவப்பிரியர், வேதராசி, சுவேதகேது, சுவேதன், விஷ்ணு, சூரியன், சந்திரன், அக்னி, அகத்தியர், நாரதர், வியாக்ரபாதர், கிருஷ்ண த்வைபாயனர்.
சுவேதாரண்யேசுவரர் கோயில்
திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில் சமய குரவர்களாகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற சிவாலயமாகும்.
இது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். இது புதனுக்கு உரிய தலமாக கருதப்படுகிறது.
இந்திரன், வெள்ளை யானை வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 11வது சிவத்தலமாகும்.
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
பிரம்மனிடம் வரம் பெற்ற மருத்துவன் என்ற அசுரன் தேவர்களுக்கு துன்பம் செய்தான். சிவபெருமான் அருளியபடி தேவர்கள் வேற்றுருவில் திருவெண் காட்டில் வாழ்ந்து வந்தனர்.
அசுரன் திருவெண்காட்டிற்கு வந்து தேவர்களோடு போர் செய்தான். அசுரன் சிவனை நோக்கி தவம் இருந்து சூலாயுதம் பெற்று ரிடப தேவரை சூலத்தால் தாக்கி காயப்படுத்தினான்.
ரிடப தேவர் சிவனிடம் முறையிட சிவன் கோபம் கொண்டார். அப்பொழுது அவருடைய ஐந்து முகங்களில் ஒன்றான ஈசான்ய முகத்தினின்று அகோர மூர்த்தி தோன்றினார்.
இந்த அகோர உருவை கண்ட மாத்திரத்திலேயே அசுரன் சிவனிடம் சரணாகதி அடைந்து வணங்கினான்.
சரணடைந்த அசுரன் அகோர மூர்த்தியின் காலடியிலும் காயம் பட்ட ரிடப தேவர் சுவேதாரண்யவரர் சுவாமி நிறுத்த மண்டபத்திலும் இன்றும் காணலாம்.
தென்னிந்தியாவின் மிகப் புகழ் பெற்ற சிறப்பு வாய்ந்த பிரார்த்தனை தலம் இது. நவக்கிரகதலத்தில் இது புதன் தலமாகும்.
தினம் ஒரு திருக்கோயில்-திருவெண்காடு
காசியில் விஷ்ணு பாதம் உள்ளது போல இங்கு ருத்ர பாதம் வடவால் விருட்சத்தின் கீழ் உள்ளது. இவர் திருவெண்காடர், திருவெண்காட்டு தேவர், திருவெண்காடையார், திருவெண்காடுடைய நாயனார், திருவெண்காட்டு பெருமான் என பெயரும் உண்டு.
தினந்தோறும் ஸ்படிக லிங்கத்துக்கு நான்கு அபிசேகங்களும் நடராஜ பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறு அபிசேகங்களும் நடைபெறுகிறது.
வால்மீகி ராமாயணத்தில் திருவெண்காடு தலக்குறிப்பு திருவெண்காடு வடமொழியில் “சுவேதாரண்ய க்ஷேத்திரம்” என்றழைக்கப்படுகின்றது.
வால்மீகி ராமாயணம்:
“சபபாத கரோபூமன் தஹ்யமான சராக்னி
நருத்ரேநேவ வினிர்தக்த ஸ்வேதாரண்யே யதாந்தகஹா”
“யமனை ஸ்வேதாரண்ய க்ஷேத்திரத்தில் சுவேதாரண்யேஸ்வரர் வதம் செய்ததைப் போன்று கர, தூஷண அரக்கர்களை ராமபிரான் வதம் செய்தார்.” என்று வால்மீகி ராமாயணம் திருவெண்காட்டு இறைவனைக் குறிப்பிடுகின்றது.
அகோரமூர்த்தி
சிவபெருமானின் 64 வடிவங்களில் 43 வது வடிவம் அகோரமூர்த்தி. திருவெண்காட்டில் அகோரமூர்த்தி தரிசனம் சிறப்பு வாய்ந்தது.
ஆதி சிதம்பரம்
நடராசசபை தில்லையைப் போலச் செப்பறையில் அமைந்துள்ளது; உள்ளே உள்ள ஸ்படிக லிங்கத்திற்கு தில்லையைப் போலவே நாடொறும் அபிஷேகம் நடைபெறுகிறது. சிதம்பர இரகசியமும் உள்ளது.
ஆதி சிதம்பரம் என்று இந்த ஊர் குறிப்பிடப்படுகிறது. நவ தாண்டவங்களை ( ஆனந்த தாண்டவம், காளி ந்ருத்தம், கௌரீ தாண்டவம், முனி ந்ருத்தம், சந்தியா தாண்டவம், திரிபுர தாண்டவம் , புஜங்க லலிதம், சம்ஹார தாண்டவம், பைஷாடனம்) நடராஜ மூர்த்தி இங்கு ஆடினாராம்.
சிதம்பரத்தில் சகுணமாக ஆடி முக்தியைத் தரும் மூர்த்தி, இங்கு நிற்குணமாக ஆடி இம்மைக்கும் மறுமைக்கும் பலன்களை அளிக்கிறார்
சிறப்புகள்
புதன் பரிகாரத் தலங்களில் முதன்மைத் தலமாகக் கூறப்படும் தலம்.
சிவபெருமானது ஆனந்தத் தாண்டவத்தின் போது அவரது முக்கண்களிலிருந்தும் சிந்திய நீர்த்துளிகளே அக்னி, சூரிய, சந்திர தீர்த்தங்களாக அமைந்துள்ளன.
படிப்பில் மனம் ஈடுபடாத மாணவ மாணவிகள் இத்திருத்தல புதனைத் தரிசனம் செய்வது பரிகாரமாகக் கூறப்படுகின்றது.
தினம் ஒரு திருக்கோயில்-திருவெண்காடு
பிறந்தநாள்/திருமண நாள் வாழ்த்துக்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.