கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா
உலகப் புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருநங்கைகள் தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்வு வரும் மே 2ஆம் தேதி நடைபெற உள்ளது.
3ஆம் தேதி திருத்தேரோட்டமும் அரவாண் களப்பலியும் நடைபெற உள்ளது. அரவானை வணங்கினால் புத்திரபாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கிராமத்தில் அமைந்துள்ளது உலகப் புகழ்பெற்ற கூத்தாண்டவர் கோவில்.
இந்த கோவிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் வெகு விமரிசையாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
கடந்த 16ஆம் தேதி கூவாகம், நத்தம், தொட்டி, குப்பம், வேலூர் உட்பட ஏழு கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்.
ஒரே நேரத்தில் தங்கள் வீடுகளில் இருந்து கூழ் குடங்களை ஊர்வலமாக கொண்டு வந்து கூத்தாண்டவர் கோவில் முன்பாக வைத்து படையல் செய்தனர்.
பின்னர் படையில் இடப்பட்ட கூழ் அங்குள்ள பெரிய கொப்பரையில் ஊற்றப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
இந்த திருவிழாவில் பங்கேற்க இந்தியாவில் டெல்லி, மும்பை, கொல்கத்தா, கேரளா, பெங்களூர் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து திருநங்கைகள் வந்துள்ளனர்.
கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா 18 நாட்கள் நடைபெறுகிறது. 18 நாட்களும் தினம் தினம் ஒரு நிகழ்ச்சி என கூவாகம் கிராமமே களைகட்டியுள்ளது. கூத்தாண்டவர் நினைத்ததை நிறைவேற்றுவதால் அவரை பக்தியுடன் ஆண்டுதோறும் விழா எடுத்து வழிபடுகின்றனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான சாமி திருக்கண் திறந்தல் மற்றும் திருநங்கைகள் தாலி கட்டுதல் நிகழ்ச்சி மே 2ஆம் நடைபெறும்.
திருநங்கைகள் மணப்பெண்கள் போல அலங்கரித்துக்கொண்டு விடிய விடிய கும்மியடித்து நடனமாடியும் பூசாரி கைகளால் தாலி கட்டிக்கொள்வார்கள்.
மகாபாரத போரில் அரவான் களப்பலி கொடுப்பதை நினைவுபடுத்தும் வகையில், இக்கோவில் சித்திரை பெருவிழாவின் 16ம் நாளில் அழுகளம் நிகழ்ச்சி நடக்கிறது.
மே 3ம் தேதி திருத்தேரோட்டம் நடைபெறும். முதல்நாள் இரவு தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள் தாலி அறுத்து வெள்ளைப்புடவை அணிந்து கொண்டு சொந்த ஊருக்கு செல்வார்கள்.
4ம் தேதி விடையாத்தியும், இதனைத் தொடர்ந்து 5ம் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.
ராஜகுமாரன் என்று அழைக்கப்படுகிற அரவான் அர்ஜுனனின் மகன். போரில் வெற்றி பெறுவதற்காக அரவானை பலி கொடுக்க பாண்டவர்கள் முடிவு செய்கிறார்கள்.
அரவானும் இதை மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொள்கிறான் ஆனால் ஒரு நிபந்தனை விதிக்கிறான். தான் இறப்பதற்கு முன், திருமணம் செய்ய வேண்டும் என்பதே.
திருமணமான மறுநாளே இறக்கப்போகும் ஒருவனை மணந்து அடுத்த நாள் விதவைக்கோலம் பூண எந்தப் பெண்ணும் முன் வர மறுக்கிறாள்.
இதைப் பார்க்கும் கிருஷ்ண பகவான் பேரழகியாக மோகினி அவதாரம் எடுத்து அரவானை மணந்து, தாம்பத்திய உறவு கொண்டு மறுநாள் விதவையாகிறார்.
அந்தக் கிருஷ்ண வடிவம் தான் திருநங்கைகள்! அதனை நினைவுகூறும் வகையிலேயே ஒவ்வொரு வருடமும் இந்த கூத்தாண்டவர் கோயில் திருவிழா நடைபெறுகிறது.
அரவான் களப்பலியும், திருநங்கைகள் திருமணமும், விதவை கோலம் பூணுவதும் நிகழ்கிறது.
அரவானை வணங்குவதன் மூலம் தீராத நோய்கள் தீரும் எனவும், குழந்தையில்லாப் பெண்களுக்கு விரைவில் குழந்தைப்பேறு கிடைக்கும் எனவும் நம்பப்படுகிறது.
உறுமைசோறு (பலிசாதம்) படையலில் படைக்கப்படும் பலகாரங்களையும், உணவையும் வாங்கி சாப்பிட்டால் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.
தர்மர் பட்டாபிஷேகத்துடன் சித்திரை பெருவிழா நிறைவடைகிறது. கூவாகம், பெரியசெவலை, திருவெண்ணெய்நல்லூர்,
கொரட்டூர் உட்பட பல்வேறு கிராம மக்கள் நேற்று முதல் 18 நாட்களுக்கு சுப நிகழ்ச்சிகள் செய்வதைத் தவிர்த்துவிடுவார்கள்.